Sunday, January 4, 2015

பொங்கல் வாழ்த்து



தத்தி தவழ்ந்து வரும்
தைமகளாம் தமிழ் மகள்!
இத்தினத்தில் வரவேற்க
தைப் பொங்கல் வைப்போம்!!

அதிகாலை துயிலெழுந்து
ஆதவன் விழிக்கும் முன்னே
தலை முதல் நீராடி
புத்தாடை உடுத்தி
புது நெல் குத்தி
புதுப்பானையில் இட்டு
மஞ்சள் கட்டி
மங்களக் கோலமிட்டு
தலைவாழை இலை போட்டு
முக்கனி படைத்து
தித்திக்கும் அன்னமிட்டு
செவ்வண்ண ரவிவர்மா
வானக் கோலங்கள் போட
தீபச்சுடர் காட்டி
செந்தமிழ் சொட்ட
பொங்கலோ பொங்கலென்பேன்

பொங்கற் பூத்தூவி
புத்தாடை தொட்டிலுக்குள்
தங்கத் தேரொட்டும்
தூயமலர் மேனியர்பால்
தங்கி தாலாட்டி
தலைதூக்கும் பொங்கல்
இருள் நீங்கி ஒளி பிறந்திட
இன்பம் எங்கும்
பொங்கி பெருகிட
தொழில்வளம் சிறந்து
செல்வம் நிறைந்திட
பொங்கலோ பொங்கலென்பேன்

தை மாதம் முதல் தேதி
வந்து நீ ஒரு சேதி
சொல்லுவாய் நன்மகளே
"தை பிறந்தால் வழி பிறக்கும்"
வடக்கிலே சங்கராந்தி
தெற்கிலே பொங்கலென்று
பொங்கு நீ திருமகளே

No comments: