தமிழர் வாழ்வில் இயல்பான இசைத்தமிழ்



இசையோடு கலந்த தமிழ் சொல்ல வந்தேன்
இசைந்து கேட்பார் எவரும் உண்டோ
இயைந்து கேட்பின் தெவிட்டாத தெள்ளமுதம்
இழைந்தோடும் இயல்பாக மனம்தனிலே
இயல்பாக இசைபாடும் தமிழ்குல மக்களின்
இசையோடு கலப்போம் நாமும் வாரீர்!!

                                                                               இராஜகுமாரி விஸ்வேஸ்வரன்

  
இசையின்றி அமையாத உலகு இந்த உலகத்தில் படைக்கப்பட்ட, ஏன் இந்த 
உலகமே கூட ஒரு வித தாளலயத்தோடுதான் இயங்குகிறது. பொங்கி வரும் நீரோடை, எரிகின்ற சுடர் நெருப்பு, காற்றோடு அசைகின்ற மண் துகள்கள், நிர்மலமான ஆகாயத்தில் தவழும் மேகங்கள், காகம் அமரும் மின்சார கம்பம், மண்களில் நெளிகின்ற புழுக்கூட்டம், பனித்துளியோடு கூடிய புட்கள், மனித குலத்து மாணிக்கங்களான உலக மக்கள், இரவில் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் இன்னும் சொல்லிளடங்கா கற்பனைகள் யாவும் ஒரு இசை வடிவே. ஒவ்வொன்றையும் பற்றி விரித்து சொல்லிக் கொண்டே போவது எளிதானதல்ல, வாழ்வியலின் சிற்சில நிகழ்வுகள் மட்டுமே இந்த பதிவில் இடம் பெற்றுள்ளன ஒவ்வொருவரையும் அவர்களது இளமைக் காலத்திற்கு அழைத்து செல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தாலாட்டு பாடல்கள்

தாயின் கருமுதலே நமது இசைப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறார்கள் தாய்மார்கள். கிராமங்களில் பாடுகின்ற தாலாட்டுப் பாடல்கள் மருவி தேவர்களையும், கடவுளர்களையும் தாலாட்டுகின்ற பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் தோன்றின என்றால், தாலாட்டைக் கேட்டுக்கொண்டிருந்த குழந்தை, வளர்ந்து, இளமைப் பருவம் தொட்டே பல சாதனைகள் புரிய தொடங்கினர். எல்லா மனிதர்களுக்கும் எந்த வயதினரனலும், குழந்தை முதல் முதியவர் வரை பாட்டை விரும்பாதவரே இல்லை எனலாம்.

தாலாட்டும் இவ்வகை சேர்ந்தது. இவை குழந்தையை உறங்க வைக்ககூடிய மெல்லிசை. ஒரு குழந்தைக்கு தாய்ப் பால் எவ்வளவு முக்கியமோ அதே போல தாலாட்டும் முக்கியம். ஏனென்றால் அது அந்த பிஞ்சு மனங்களில் பதிகின்ற இயல்பான கீதம், அவை எப்போதும் மிருதுவாக, குழந்தையை அமைதியான ஆழ்ந்த மனநிலையில் வைத்திருக்கும். இது மழலை தியானத்திற்கு ஒப்பானது.

இந்த கணிணி யுகத்தில் விதம் விதமான குற்றங்கள் மலிந்துவிட்டன. நாம் கற்பனைக்கூட செய்துப் பாராதளவிலான குற்றங்கள்!! ஒரு ஒப்புமைக்காக அக்காலக் குற்றத்தோடு இக்காலக் குற்றத்தைப் பார்த்தோமேயானால், அக்காலக் குற்றங்கள், குற்றங்கள் பட்டியலிலே சேர்க்க கூட வேண்டாம் என்று கூட தோன்றிவிடுகிறது. மிக சொற்பமான குற்றங்களே அவை. அவர்கள் மனசாட்சியோடு கூட இருந்திருக்கிறார்கள், காரணம் அவர்களின் இளமை பருவத்திலே அந்த பிஞ்சு மனத்திலே பதிந்துவிட்ட மெல்லிசை தாலாட்டு தான் அதற்குக் காரணம்.

குழந்தைகளிடம் இப்போது மென்மை குறைந்து வருகிறது. அவர்களின் கள்ளமில்லா அறியாத் தன்மை, குறும்புத்தனம், சுட்டித்தனம் எல்லாம் ரசிக்க கூடியவை என்பது மறக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை. பொதுவாக தாலாட்டு பாட்டு கேட்டு, கதை கேட்டு உறங்ககூடிய குழந்தைகள் சர்வ நிச்சயமாக நன்றாக வளர்ந்து சமுக பொறுப்புள்ளவர்களாகவும், நல்ல குணவான்(வதி)களாகவும், நற்பண்பாளர்களாகவும் வளர்வார்கள் என்பதில் ஐயமில்லை. இதற்கு காரணமான அந்த தாலாட்டுப் பாடல்களை பாட இசை மேதையாகவோ, கவிஞர்களாகவோ  இருக்க வேண்டியதில்லை. எல்லா பெண்களுமே அல்லது ஆண்களும் கூட பாடலாம். ஆனால் பெண்ணின் (அம்மா) குரலுக்கு மதிப்பதிகம்.

சில பாடல்கள் இதோ உங்களுக்காக……….சுருக்கமாக:


1. கண்ணான கண்ணுக்கு
என் கண்ணே நீ கண்ணுறங்கு
தூங்காத கண்ணுக்கு
துரும்புகொண்டு மையெழுதி
உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
சிங்காரப் பொண்ணுக்கு
சீரங்கத்து சித்தாடை................
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே நீ கண்ணுறங்கு

2. பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு.....................
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியப்பா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே.

இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் பாடப்படுகின்றன. இது அந்த குழந்தையின் குடும்பத்தை பற்றிய அறிமுகப்படலம் போன்று அமைகிறது. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன. இந்தப் பாடல்களைப் பொருத்த மட்டில் மனனம் செய்துப் பாடலாம், அது ஒரு வகை. தமது பிள்ளைகளைப் பற்றிக் கண்டிருந்த கற்பனைகளை சொற்களாக்கியும் பாடல் வடிவில் பாடலாம். தேவை குழந்தையைப் பற்றிய சிறப்பிக்கும் சொற்களோடமைந்த மெல்லிசை அவ்வளவே. முன்பு சொன்னதுப் போல இவை குழந்தையின் ஆழ்மனத்தில் பதிந்துவிடுகின்ற அற்புத கீதம். அவை செய்யும் இந்திர மந்திர ஜாலங்கள் அனுபவத்தில் பெறக் கூடியவையே.
நாம் மழலையாக இருப்பதும், நம்மை சுற்றி மழலை இருப்பதும் சொர்க்கம், பூலோகத்தில் அமைந்து விட்டது போன்று. இக்கால இளம் தாய்மார்களே! தயவு செய்து உங்களது சொர்க்கத்தை நீங்களே இழக்காதீர்கள். இளம் பெற்றொர்களே! தமிழில் அமைந்த அழகான இயல்பான கீதங்களைப் பாடி உங்கள் பிள்ளைகளை வளர்த்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை. இவ்வாறு தான் ஒவ்வொரு மனிதனின் இசைப்பயணமும் இனிதே தொடங்க வேண்டும், குற்றங்கள் குறைந்து மறைய வேண்டும்.

கல்வி பாடல்கள்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

நம் பெற்றோர்கள் சேர்த்து வைக்கின்ற செல்வங்களிலேயே தலை சிறந்த செல்வம் கல்வி செல்வம் மட்டிலுமே. கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. வேறுபாடுகள் களைந்து பழகக்கூடிய தன்மையை வழங்கும் கல்வி செல்வத்தை அளித்தவர்களை நாம் மதித்து போற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடமை.

அரசு பள்ளிகளில் வாரத்தில் இரண்டு வகுப்புகள் இசையை ஒரு பாடமாக வைத்திருப்பதை வழமையாக கொண்டுள்ளனர். மழலையர் பள்ளிகளில் அகர வரிசை, எண்கள் போன்றவற்றை ஒரு ராகத்தோடு சொல்லித் தருகிறார்கள், அதனாலேயே சிறுவயதில் கற்றது நமக்கு மறப்பதில்லை. ஒரு பயிற்சிக்காக உங்கள் குழந்தைகளின் கடினமான பாடங்களை ஏதோ ஒரு ராகத்தோடு அல்லது ரிதத்தோடு சொல்லிக் கொடுத்துப் பாருங்களேன், சட்டென மனதில் பதிந்துவிடும். பாரதிதாசன் பாடல் ஒன்று நினைவில் தோன்றுகிறது.....

தலை வாரி பூச்சூட்டி உன்னை
பாட சாலைக்குப் போ என்று
சொன்னாள் உன் அன்னை.
சிலை போல ஏன் அங்கு நின்றாய்?
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் ?
விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி?
வேளைதோறும் கற்று வருவதால் படியும்
மலைவாழை அல்லவா கல்வி
நீ வாயார உண்ணுவாய் போ என் புதல்வி
படியாத பெண்ணாய் இருந்தால், கேலி
பண்ணுவார் என்னை இந்த ஊரார் தெரிந்தால்
கடிகாரம் ஓடுமுன் ஓடு, என்
கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு.

இது போன்ற பாடல்கள் கல்வியின் சிறப்பை பற்றி விளக்குகின்றன. நம் குழந்தைகளை வழி நடத்திச் செல்ல ஏதுவாகின்றன.
கல்வி என்பது யாதெனின் மூளையை தூண்டுவதாயும், அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாயும், நல்ல பழக்க வழக்கங்களையும், நன்னடத்தையையும் உருவாக்குவதாயும், சொந்தக் காலில் நிற்கக்கூடிய திறமையை மேம்படுத்துவதாயும் அமைய வேண்டும் என்று விவேகானந்தர் கூறியுள்ளார். அவ்வழியில் நாமும் செல்வோம்.

தொழில் பாடல்கள்

நம் முன்னோர்கள் உழைப்பின் உயர்வைப் பற்றி உணர்ந்து பலவித கருத்துகளை பதிந்து வைத்துள்ளனர். இந்தியாவின் முதன்மைத் தொழில் விவசாயம். ஒரு நாட்டில் விவசாயம் வளர்ந்தால் அதன் மூலமாக அரசனின் ஆட்சியும் செழித்தோங்கும் என்னும் பொருள்பட ஔவையார் குலோத்துங்க சோழன் முடிசூட்டு விழாவில் பாடியுள்ளார்,

வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயரும்

இது இலக்கியம் சார்ந்த கவியாயினும் ஔவையின் பாடலில் இழைந்தோடிய தொலைநோக்கு சிந்தனை பிரமிக்க வைக்கிறது. ஓரு நாட்டின் வளர்ச்சி விவசாயம் சார்ந்ததே என்று நம் முன்னோர்கள் வகுத்த வழியை நமது அரசியல் அமைப்பாளர்கள் கருத்தில் கொள்வார்களா? விவசாயத்தை பொருத்த மட்டில் எல்லாம் பேச்சு வார்த்தையிலே இருக்கிறதே தவிர நடைமுறை செயல்பாட்டில் காணப்படவில்லை. அரசாங்கம் ஔவையின் அறிவுரைக்கு செவி சாய்க்குமா?

மக்களின் வியர்வையில் பூத்த பாடல்கள், காலங்கள் பல கடந்து வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. கிராமங்களில் நாற்று நடும்போது பாடும் பாடல்களும் நிறைய உண்டு.

நடவு பாட்டு
நிறுத்தின திரு அலகு
நின்று பயிர் ஏற வேணும்
சாத்தின திரு அலகு
சாய்ந்து பயிர் ஏற வேணும்
நெல்லா விளையவேணும்
நெடுங்களங்கள் ஏறவேணும்
கதிரா விளையவேணும் - எங்களையா
களஞ்சியங்கள் ரொம்பவேணும்

களையெடுக்க பாட்டு
கண்ணாடி வளையல் போட்டுக்
களையெடுக்க வந்த புள்ள
கண்ணாடி மின்னலில
களையெடுப்புப் பிந்துதடி.

இது விவசாயம் பற்றிய தெம்மாங்கு பாட்டு. இதை போன்று பல ஊர்களில் பல விதமான பாட்டுக்கள் பாடப்படுகின்றன. அவை ஊர் சார்ந்தவையாக, வயல் சார்ந்தவையாகவும் இருக்கின்றன. ஏர்ப்பாட்டு, கதிர் அறுப்பு பாட்டு, களை எடுக்க, வண்டிக்காரன் பாட்டு என பல விதமான பாட்டுகள் நம் மக்களிடையே குவிந்து கிடக்கின்றன, ஆனால் உயிர்ப்பிப்பதற்கு சொற்பமான நபர்களே வாழ்கின்றனர்.

மீனவர் பாட்டு
மானம் நல்ல ஏலேலோ கிடுகிடுங்க ஐலலோ
கிடுகிடுங்க ஐலலோ
மத்தளமே ஏலேலோ ஓசையிட ஐலலோ
ஓசையிட ஐலலோ

தமிழரின் இயல்பு வழக்கமான பழமொழியில் கூட வேடிக்கையாக அவரவர் பிழைப்பை பற்றி கூரும் வழக்குகள் உள்ளது

"கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்."

இது உழைப்புக்கான கூலியை பற்றியது திருவிழா சமயங்களில் கூத்தாடி பிழைப்பவர்கள் விடிய விடிய கூத்தாடிவிட்டு விடியும் தருவாயில் அதாவது சூரியன் உதிக்கும் சமயத்தில் தனது சன்மானத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள், அது போல தொழிலாளிகள் காலை முதல் வேலை செய்து சூரியன் மறையும் போது தனது கூலியை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். உலகம் முழுவதும் பணத்தை நோக்கியே ஒடுகிறது. இப்படி வேடிக்கை பேச்சில் கூட ஆழ்ந்த கருத்துக்களை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

ஏலேலோ, ஐலசா, இந்த இரண்டு சொற்களும் வைத்து பற்பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பொதி சுமப்பவர்கள், பாரவண்டி இழுப்பவர்கள், கடின வேலை செய்பவர்கள் பாட்டில் இந்த வார்த்தை இடம் பெற்றிருக்கும். கடினமான வேலைகள் அல்லது தனியாக செய்யக் கூடிய வேலைகளுக்கு துணையாக இது போன்ற பாடல்கள் இதமாக இருக்கும். அனுபவத்தில் அது புரியும். சினிமா பாட்டுக்கள், குத்துப் பாட்டுக்கள் என்று பரவி விரவி இருந்தாலும் அவை நம் கிராமத்துக் கீதங்களிலிருந்து தோன்றியவைதான். இதற்கெல்லாம் பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் யாருமில்லை. நன்றாக கூர்ந்து நோக்கினால் நமது திரையுலக இசையமைப்பாளர்கள் மெட்டு போடும்போது வார்த்தைகளின்றி இசையமைக்க விழையும்போதும் "தந்தனானா" போடாதவர்கள் அபூர்வமே. இப்படி இசை உழைப்பிலும் கலந்து மக்களை இயக்குகிறது.

சமையல்

மனிதனின் வாழ்விற்கு மகத்தான சக்தியை கொடுக்க கூடியது உணவு. எண்சாண் உடம்பிற்கும் ஆதாரம் இந்த வயிறு தான். உணவைப் பற்றி பலவித குறிப்புகள் நம் வலைபூக்களிலும், யாரோ சொல்லக் கேட்டும் செய்து பார்திருப்போம். இதோ நாட்டுபுறப் பாடலில் பார்ப்போம். இதை கேட்டால் சிறுபிள்ளை கூட சுலபமாக சமைத்திடும்; இப்படி கூறுவதற்கு கூட ஒரு பழமொழி உண்டு.

 "அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும்."

இங்கு 5 என்று சொல்லப்படுவது "மிளகு, உப்பு, கடுகு, சீரகம், மற்றும் புளி" 3 என்று சொல்லபடுவது "நீர், நெருப்பு, மற்றும் எரிபொருள்" கருத்து என்னவென்றால் கையில் 3ம் 5ம் இருந்தால் சின்ன பெண் கூட சமைக்கும். ஒரு செயலை செய்வதர்க்கு தேவையானவை எல்லாம் கையில் இருந்தால் செய்வது சுலபம். இப்போது சமையல் பாடல் குறிப்புகள்:

பரங்கிக்காய் பக்குவம்

பரங்கிகாயை பறித்து
பட்டையெல்லாம் சீவி
பொடி பொடியாய் நறுக்கி
உப்பு காரம் போட்டு
ஒண்ணா கூடி திங்கலாம்
இங்கே ஓடி வாருங்கள்

பாகற்காய் பாட்டு

ஒரு கொடியை தூக்க தூக்க
ஒராயிரம் பாவக்காய்
சட்டியிலிட்ட பாவக்காய்
சட்டி தாளிச்ச பாவக்காய்
அரிக்க பொரிக்க சொல்லி
ஐயன் தின்ன பாவக்காய்
அப்பிடியாக் கொத்து பாவக்காய்
அஞ்சுப் பணத்துக்கு விக்கலாம்

மாம்பழப் பாட்டு

மாம்பழமாம் மாம்பழமாம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
பாதி பழம் உனக்கு
மீதி பழம் எனக்கு
பங்கு போட்டு திங்கலாம்

இவ்வகையான பாடல்களைக் கேட்டால் நமக்கே சமைத்து சாப்பிட வேண்டும் போல தோன்றும். சமையல் இவ்வளவு சுலபமானதா என்றும் தோன்றும். கூடி உணவருந்தும் பழக்கத்தையும் இந்தப் பாடல்களில் காணலாம். இப்போதைய காலக்கட்டத்தில் யாருக்கும் நிற்க நேரம் இருப்பதில்லை; அதோடு கூட நமது பொழுதுபோக்கு அம்சங்களும் நவீனமயமாக்கப்பட்டுவிட்டன. இதில் மழலை பேச்சும், சமையல் சுவாரசியமும் குறைந்து வருகின்றன. அழிந்து விடாமல் காப்பது நம் கையில் தான் உள்ளது.

நல்ல கருத்துள்ள புத்தகங்களை நோக்கி நம் கவனம் ஈர்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என உறுதி பூண்டு செயலாற்றுவோம்.

சமயமும் சமூகமும்

ஒரு நாளைத் தொடங்கும் முன் நாள்காட்டியில் தேதியை கிழிக்கிறோம், நாம் முதலில் பார்ப்பது என்ன; நாள் எப்படி இருக்கிறது - ராகு காலம், நல்ல நேரம், ராசி பலன் போன்றவை. ஒவ்வொருவரும் ராகு காலத்தை அதி சிரத்தையாக பார்ப்போம் தானே, அப்படியானால் வாருங்கள் இதோ சுலபமாக மனனம் செய்ய ஒரு பாடல்

திருவிழா   சந்தையில்  வெயிலில் புரண்டு
(7.30 - 9.00)   (9.00 - 10.30)   (10.30-12)     (12-1.30)
விளையாட செல்வது   ஞாயமா?
 (1.30-3)        (3-4.30)     (4.30-6.00)

மேற்சொன்ன பாடலில் ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம் "தி ச வெ பு வி செ ஞா". இப்போது கிழமைகளின் முதல் எழுத்துக்களை நினைவில் கொண்டு ("தி" = திங்கள்) ஒரு கணக்கு வைப்போம். பொதுவாக ராகு காலம் காலை 7.30 மணிக்கு ஆரம்பம் ஆகும் ஆதலால் பாடலின் முதல் எழுத்து முறையே "தி" = திங்கள் - காலை 7.30 - 9.00 "" = சனி - காலை 9.00 - 10.30. இவ்வாறு நேரத்தை 1.30 மணி விகிதமாக முறையே ""தி ச வெ பு வி செ ஞா" முடிய அதாவது "ஞா" -ஞாயிறு - மாலை 4.30 - 6.00 முடிய என்று கணக்கிட்டு கொள்ளவும். இது ஒரு எளிமையான தமிழ் சூத்திரம்!!!

கணக்கை போலவே தமிழ் மக்கள் நம் மூதாதையர்கள் வார்த்தை பிரயோகத்திலும் கவனமாக இருந்தார்கள். எப்போதும் நல்ல வார்த்தைகளை பேசுவதையே வழக்கமாக கொண்டனர். இக்காலம் போல் அல்லாமல் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அவசர காரியமாக வெளியே செல்வோரும், நெடுந்தூரம் பயணம் செய்து ஊர் ஊராக செல்பவர்கள், வியாபாரிகள் என்று பலர் தம் வேலையாக செல்லும் போது நமது உரையாடல்கள் கேட்கபடலாம்.

சஞ்சலமான மனதோடு ஒருவர் வீதியில் சென்று கொண்டிருக்கும்போது "நீ உருப்படமாட்டே" என்று யாரோ யாரயோ திட்டி கொண்டிருப்பார், அது தனக்கும் சேர்த்துதான் என்று இவர் எண்ணி மனம் நோவார். இப்படியும் நடக்கலாம். பெரியவர்கள் திட்டும்போது கூட "நாசமத்து (நாசம் + அற்று) போனவனே (இக்கால வழக்கில் நாசமா போனவனே - எதிர்மறை சொல்லாக மாறிவிட்டது), கேடுகெட்டவனே" என்றல்லாம் திட்டுவார்கள், உண்மையில் அதன் பொருள் என்ன? நாசம் இல்லாமல் நன்றாக இருப்பான், கேடு கெடட்டும் நன்மை சேரட்டும் என்பது தான். இப்படி வசவுகள் கூட வாழ்த்தாக தான் அமைந்திருக்கிறது.

நோய்க்கு மருந்து சொன்னால் நம்மில் எத்தனை பேறுக்கு அதை நினைவு கொள்ள முடியும். அதற்காகவே பழமொழிகள் அமைத்து மருத்துவத்தையும் பதிவு செய்துள்ளனர்.

"சுக்கு தின்று முக்கி பிள்ளை பெற்றால் தெரியும் பிள்ளை அருமை"

"கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு"

"எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும்                        எட்டே கடுக்காய்"

இந்த மூன்று பழமொழியும் ஒன்றோடொன்று தொடர்புடையது. பொருள் இது தான்: கடுக்காய் மருந்துக்கு பயன்படுத்தும் போது உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு மேலிருக்கும் தோல் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும் அது போல சுக்கு (காய்ந்த இஞ்சி) தோலை அகற்றிவிட்டு உட்பொருளை பயன்படுத்த வேண்டும். சுக்கு மற்றும் கடுக்காய் பிள்ளைபேற்றின் போதும், எரு கெட்டவருக்கும் (மலக்கட்டுள்ளவர்) (கடுக்காய் சிறந்த மலமிளக்கி) 8 கடுக்காய் தோலை இழைத்து பக்குவமாக மருந்து கொடுக்க குணமடைவர்.

இவ்வாறு நம் தமிழ் மக்கள் பற்பல பொக்கிஷங்களை நம்மிடையே விட்டு சென்றுள்ளனர். நம்மால் பாதுகாக்க முடியுமா? சிந்திப்போம் செயல்படுவோம்.

காதல் பாடல்கள்

காதல் என்பது மனிதனின் ஜீவசக்தி. சகல துன்பங்களையும் தொலைக்கும் சக்தி காதலிடம் இருக்கிறது. என்ன தான் உலகம் மாறிக் கொண்டே வந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான விருப்பம், நேசம் இன்னும் மாறவில்லை, அது மாற வழியுமில்லை. உலகம் சுருங்கி கையடக்கமாக வந்தாலும் மனித உணர்வுகளின் பகிர்வுகளுக்கு ஒப்பாக வேறொன்றை இன்னும் விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை அதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. பாசம் குறைந்து வருகின்ற காலக்கட்டத்தில் நமக்கு இவ்வளவு காதல் பாடல்கள் கிடைக்கின்றன என்றால் இலக்கியங்களும், புராணக் கதைகளும் செழித்தோங்கிய பண்டைய தமிழ் மக்களின் காதல் பாட்டுக்கு கேட்கவா வேண்டும்.

1. உங்களை நெனச்சு நெனச்சு
  உருகிச்சே எம்மனசு
  சொந்த வீடு போல நீங்க
  நெனச்சிருந்தா சொகுசு
  ஓயாம தவம்செய்து
  உருக்கமாப் பெத்தெடுத்த
  தாயையும் தகப்பனையும்
  மறந்தேன் உங்களாலே
2. முத்துமாலை வாங்கித் தாரேன்
  மேலான கம்மல் தாரேன்
  பத்தினியே உனக்கு - என் ஆசைக் கண்ணாட்டி
  பளிங்கைப் போலப் பவளந்தாரேன் என் நேசக்கண்ணாட்டி
3. வாங்கடி வாங்கடி தோழி பெண்டுகளா-வள்ளி
  மாமயில் பாட்டை படியுங்கடி
  கானலில் இருந்த மாமயிலே-கந்தன்
  கண்ட கதைய படியுங்கடி
  குறவர் குடிசை நுழைந்தானடி-அந்த
  கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
  துறவர் வணங்கும் புகழாண்டி-அவன்
  தோற்றத்தை பாடி அடியுங்கடி

இம்மாதிரி பாடல்களில் காதலர்களை பற்றி ஊரார் பாடும் பாடல்களும் உண்டு. கும்மி பாட்டு, கல்யாண பாட்டு, சடங்கு பாட்டு என்று பல வகை பாடல்கள் உள்ளன. பாடல்கள் சுருக்கமாக கொடுக்கப்பட்டாளும் உருக்கமான பாடல்கள் தானே.! இந்தப் பாடல்களை கேட்டு கொண்டே இருந்தோமேயானால் நமக்குள் ஒரு கவிஞன் உருவாவது உறுதி. பாடல் நடையின் எளிமை, கடினமான ஸ்வரங்களும் ஜதியும் கிடையாது, ஆதலால் பாடல் செய்வீர்.

விளையாட்டு பாடல்கள்

குறைந்து வரும் சிறப்பம்சங்களில் விளையாட்டும்  பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பிள்ளைகள் தெருவில் ஒடி விளையாடுவதை காண்பதே கண்கொள்ளாக் காட்சி. எத்தனை விதமான விளையாட்டுகள் மறைந்துவிட்டன. சில விளையாட்டுகள் கணிணியில் இடம் பிடித்துள்ளன. உதாரணமாக "ஆங்க்ரி பேர்ட்ஸ்" குழந்தைகளின் விருப்பமான விளையாட்டு, அது வேறு ஒன்றுமில்லை, நம்ம உண்டிவில் (கவட்டையடி, கவண்வில்) தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த விளையாட்டை ஆர்வமுடன் விளையாடுகிறார்கள். இது நல்ல முயற்சி ஆனாலும் தெருவில் விளையாடும் குழந்தைகளை பார்ப்பது அரிது.

எத்தனை விதமான விளயாட்டுகள்!!! விளையாட்டின் பேரே நன்றாக இருக்கும். சடுகுடு, கிளித்தட்டு, பம்பரம், அணிற்பிள்ளை, பூக்குதிரை, பட்டம், பொதியாட்டம், கோலி, தட்டாங்கல், தாயம், கிச்சுக்கிச்சுத் தம்பலம், ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, குறிஞ்சி, மண்குவியல், பாண்டியாட்டம், சில்லி, பூப்பறிக்க வருகிறோம், அசோகவனத்தாட்டம், பல்லங்குழி, குலைகுலையாய் முந்திரிக்காய், கண்ணாம்பொத்தி, நொண்டி, புலியும் ஆடும் இன்னும் பல.

மூன்றாங்கல் பாட்டு

ஒன்றாவது ஒன்றாங்காய்
இரண்டாவது இரத்தினமணி
மூன்றாவது முத்துச்சரம்
நாலாவது பொற்சரடு
அஞ்சாவது பஞ்சவர்ணம்
ஆறாவது பாலாறு
ஏழாவது செங்கதிர்
எட்டாவது கற்கண்டு
ஒன்பதாவது ஓலைப்பூ
பத்தாவது பத்துப்பாட்டு
பதினொன்றாவது தென்னம்பிள்ளை
தென்னமரத் தடியிலே தேரோடும் பிள்ளையார்.

சடுகுடு பாட்டு

நான்தான் வீரனடா; நல்லமுத்து பேரனடா
வெள்ளிசிலம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க சிலம்பெடுத்து தாலிகட்ட வாரேன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு

வினா விடை பாட்டு

கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேவல?
மழபெஞ்சுது நான் வேவல.
மழையே மழையே ஏன் பேஞ்ச?
புல்லு வளர நான் பேஞ்சேன்.
புல்லே புல்லே ஏன் வளந்த?
மாடு திண்ண நான் வளந்தேன்.
மாடே மாடே ஏன் திண்ண?
மாட்டுக்காரன் அவுத்துஉட்டான் நான் திண்ணேன்.
மாட்டுக்காரா மாட்டுக்காரா ஏன் அவுத்து விட்டே?
புள்ள அழுவுது நான் அவுத்துவிட்டேன்
புள்ள புள்ள ஏன் அழுவுற?
எறும்பு கடிச்சி நான் அழுவுறன்.
எறும்பே எறும்பே ஏன் கடிச்சே?
என் புத்துக்குள்ள கையஉட்டா சும்மா இருப்பேனா
?

இலக்கிய நடையில் அல்லாமல் பேச்சு வழக்கிலே பாடக் கூடிய இந்த மாதிரியான பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். நினவில் கொள்வதும் எளிதாக இருக்கும். நகைச்சுவை மிகுந்த, கேலி கிண்டல்களுடன் கூடிய, சமயத்தில் நாட்டு நடப்பும் கூட பாடல் வரிகளில் தென்படும். இவை காலப் பெட்டகமாக திகழ்கின்றன.

வீரம் செறிந்த பாடல்களும் விளையாட்டு பாடல்களில் உண்டு. நாட்டு பற்று மிகுந்திருந்த காலத்தில் ஆண் பிள்ளைகள் போர் படையில் சேர்வதை வாழ்வின் லட்சியமாக கொண்டிருப்பார்கள், அது விளையாட்டிலும் கூட வெளிப்படும். சில்லி, நொண்டி பல்லங்குழி போன்ற விளையாட்டுகள் பெண் பிள்ளைகள் விளையாடுவார்கள், இதற்கு காரணம் வாழ்க்கைக்கு தேவையான சிக்கனம் ஒரு கட்டத்துக்குள் செலவுகளை சமாளிக்க பழகுதல், பொருளாதார மேலாண்மை ஆகியவை கற்பிக்கபடுகின்றன.

ஒவ்வொரு விளையாட்டுக்கு கூட பொருளோடு தான் நம் முன்னோர்கள் வகுத்து வழக்கப்படத்தியிருக்கிறார்கள்.

ஒப்பாரி பாடல்கள்

மனிதன் பிறக்கும் பொழுது எப்படி தாலாட்டு தேவைப்படுகிறதோ அதே போல ஒரு மனிதனின் மரணத்திற்கும் இறுதி தாலாட்டு தான் ஒப்பாரி. ஒப்பாரி பெயர் காரணம் அறியமுடியவில்லை. ஒப்பாரி என்பது மரணித்த மனிதனின் வாழ்க்கை பற்றியதாக இருக்கும் சோக கீதம். வாழ்வாங்கு வாழ்ந்து மீளா உறக்கத்தில் ஆழ்ந்தவருக்கு நம் மக்கள் பாடும் இறுதி தாலாட்டு தான் ஒப்பாரி. கேட்பதற்கு அவர் இல்லை எனினும் அவர் புகழ் பாடி பிரியா விடை கொடுத்து சடங்குகள் செய்து பிறவி கடைத்தேற வழி செய்வர். இப்பாடல்கள் பாடுபவர் பாடும் விதத்தில் கேட்பவருக்கு துக்கத்தைக் கொடுக்கும், அழுகை பொங்கி வரும். இழப்புகளை மறக்க வாய்விட்டு அழுவது மிக முக்கியம், அது இதயத்துக்கு நன்று. பல வித நோய்களை தடுக்கும் அருமருந்து. மரணித்தவரோடு தொடர்புடையவர்கள் இந்த ஒப்பாரி பாடல்களை கேட்டு தூக்கம் மேலிட அழுது புரண்டு துக்கத்தை போக்கி கொள்ள முயலுவார்கள்.
அப்படிப் பட்ட பாடல்கள் சில:

1. பயறு வறுத்தினமோ ஐயா என்ர ராசா
துரையே துரைவடிவே
உனக்கு வாய்க்கரிசி போட்டினமோ
உன்னை இழந்ததனால்
என்ர உதரமெல்லாம் பதறுதையோ

2. பொன்னு அடுப்பு வச்சு
பொங்க வச்சேன் சாதங்கறி
பொங்கி வெளியவந்தா
பொகை போவச் சன்னலுண்டு
பொங்கி வெளியே வந்தா
புருசனில்லாப் பாவியென்பார்

3. என்னப் பெத்த சீதேவியே
கப்பல் சுணங்கிவரும் அம்மா
நீங்கள் போட்ட கடிதம் முன்ன வரும்
நான் கடிதத்தைக் கண்டவுடன்
கடிதத்தை உதறிவிட்டேன்
கண்ணீரை இறக்கிவிட்டேன்;

இவ்வாறு தமிழ் மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு வாழ்ந்து வாழ்வை வளமாக்கினர். இந்த கட்டுரையில் பாடல்கள் சுருக்கமாகவே கொடுக்கப்பட்டுள்ளது, உதாராங்கள் என்று சொன்னால் 0.01 சதவிகிதம் கூட கிடையாது. செப்பேட்டில் பதித்த பாடல்கள், இன்னும் வழக்கில் இருந்து மறையாத பாடல்கள் என்று கணக்கிளடங்கா பாடல்கள் உள்ளன. எப்படி நாம் இலக்கியங்களுக்கு மகத்துவம் கொடுத்து ஓரளவுக்கு காபந்து செய்திருக்கிறோமோ அது போல கிராமிய மனம் கமழும் நம் நாட்டுப்புற கீதங்களையும், தெம்மாங்கு பாடல்களையும் காப்பற்றி கரை சேர்ப்பது நம் தமிழ் மக்களின் கடமை.

பண்டைய தமிழ் மக்களின் மூச்சு இன்னும் அந்த பாடல்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை உயிர்த்தெழ செய்வதன் மூலம் பல பொக்கிஷங்கள் மீட்டு எடுக்கப்படும். நோய்க்கான மருந்து முதல் வீட்டுக்கு தேவையான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பல பாட்டில் மறை பொருளாக உள்ளன. இந்த பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சி ஆங்காங்கே காணப்பட்டாளும் முழு மூச்சூடன் செயல் திட்டமாக அமையவில்லை.

உலக தமிழ் மக்களே! வரலாறு என்பது மூக்சு காற்றைப் போன்றது, மூச்சு சீராக இல்லை என்றால் பல வித பின்னடைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.

மூச்சை சீரமைப்போம்!  வாழ்வை சீரோடு சிறப்புமாக வாழ்வோம்!!






No comments: