Wednesday, May 11, 2016

புத்தக நேசம் - How To Read Books

புத்தக நேசம்

முன்னோட்டம்
புத்தகம் = புது +அகம். நமக்குள் புதுமைகளை விதைக்க கூடியது புத்தகம். புத்தகம் படிப்பது என்பதே ஒரு கலை. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அது தான் உண்மை. எப்படிபட்ட புத்தகங்களை நாம் படிக்கிறோம்? நம் மனதுக்கு சந்தோஷம் தரக் கூடியவைகளை மட்டுமே படிக்கிறோம் அல்லது படித்ததை மேற்கோள்களாக காட்டுவதற்காக பல விதமான புத்தகங்களை மேய்கிறோம். அப்படியென்றால் நமக்கு பயன் தரும் வகையில் புத்தகம் வாசிப்பது எப்படி? புத்தகம் நல்ல நண்பன் என்று சொல்கிறார்கள், அது எப்படி சாத்தியம் ஆகும். எல்லாருக்கும் அது போல அமைவதில்லை. ஆனால் அமைத்துக் கொண்டால் மட்டுமே அந்த வாக்கியத்திற்கு அர்த்தம் கொடுத்ததாக ஆகும்.

புத்தகம் படிக்கும்போது அதன் கருத்துகள் உண்டாக்ககூடிய உணர்வுகளை உணர வேண்டும். எந்த ஒரு செய்தியையோ அல்லது கதையில் வரக்கூடிய சூழல்களில் நாம் பெறும் செய்தி என்ன? என்பதை சரியான கோணத்தில் புரிந்துக் கொள்வதும், அதை நம் வாழ்க்கை நடைமுறையில் பயன்படுத்த முனைவதும் அவசியமானது. இவ்வாறுதான் நம் வரைமுறைகளை வகுத்துக் கொண்டு நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு பகுதிகளை படிக்க ஆரம்பித்து வளர்த்துக் கொண்டால் கனமான கருத்துகளோ அல்லது எளிமையானதோ; அது எப்படிபட்ட தன்மையோடு இருந்தாலும் நாம் அன்னப்பட்சியாக மாறிவிடுவோம்.


நமது மூளையின் பதிவுகள்


புத்தக வகைகள்
நாவல், கட்டுரை, கவிதை, சுயசரிதம், துணுக்குகள், குறிப்புகள், செய்திகள், செயல்முறை விளக்கம் போன்றவை பெரும்பிரிவாக பிரித்துக் கொள்ளலாம். அதன்பிறகு ஒவ்வொரு பகுதிக்கும் தனிதனித் துறைகள் அமைத்துக் கொள்ளலாம். நாவல் என்று எடுத்துக்கொண்டால் சரித்திரம், சமூகம், உண்மைக் கதைள், கட்டுரை என்றால் விழிப்புணர்ச்சி, ஆராய்ச்சி என்று ஒவ்வொரு பகுதிக்கும் பற்பல விதமான கருத்து செரிவான நூல்கள் வந்த வண்ணமுள்ளன. நகைச்சுவை கதைகள், சமூக கட்டுரைகள், புதுக்கவிதை, மரபுக்கவிதை, மேதைகளின் சுயசரிதைகள், விஞ்ஞான மெய்ஞ்ஞான செய்திகள், குழந்தைகளுக்கான பகுதிகள், சரித்திர குறிப்புகள் போன்ற பல பரிமாணங்களை படித்து தெரிந்துக்கொள்ள வகை வகையாக புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களின் மூலம் நாட்டின் பலவித கட்டுமான அமைப்புகள் வலுப்பெற்றுள்ளன.


பயன்கள்
ஒரு உன்னதமான பொழுதுபோக்கு சாதனம் புத்தகம் மட்டுமே. சிந்தனையை தூண்டக்கூடிய கருத்துகளை அள்ளித்தரும் பொக்கிஷ பேழை. ஒரு அறிஞனின் கருத்துபுத்தகம் இல்லாத வாழ்வு சூன்யமானதுஇப்போதிருக்கும் காலக்கட்டம் தனிக்குடித்தனம் (Nuclear Family) என்ற அமைப்பு பெரும்பான்மையாக காணப்படுகிறது. அதில் நமது முதிய தலைமுறையின் பங்கு என்பது மிக்குறைந்த அளவே. புத்தகங்கள் இந்த இடத்தை நிரப்பும் என்பது ஓரளவுக்கு சாத்தியம், ஆனால் அவையும் நம் முந்தைய தலைமுறையினர் காட்டும் வழிமுறை என்னும் விதத்தில் முழுமை பெறுகிறது.
சரித்திர குறிப்புகள் மூலம் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, நகர கட்டமைப்பு, வாழ்வியல் நெறிகள், போர்முறைகள், வானியல், ஜோதிடம், இசை, நாடகம், சந்தை நிலவரம் மேலும் பன்முக செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. வாழ்வின் வழிகாட்டியாக விளங்குகின்றன. இந்தியர்கள் எல்லா துறையிலும் வெற்றி பெறுவதற்கு வழி வகுப்பதே இந்த புத்தகம் படிக்கும் பழக்கம் தான். எல்லா மனிதர்களுக்கும் நல்ல ஆசிரியர் கிடைப்பது அரிது, அதே போல ஒரு நல்ல ஆசிரியர் உலகம் முழுவதும் உள்ளவர்கலுக்கு நேரிடையாக பயிற்சியளிப்பதும் சாத்தியப்படாது. ஆனால் இந்த இரு முனை கத்திகளும் புத்தகம் வாயிலாக அதன் விருந்தை பெறுகின்றன. ஒரு நாட்டின் எல்லா வகையான வளர்ச்சிக்கும் புத்தகங்கள் பெருந்தூணாக செயல்படுகின்றன. அதனால்தான் நூல் நிலையங்களை அரசாங்கமே பாதுகாத்து சாமான்யர்களுக்கும் புத்தகங்களின் பயன்கள் கிடைப்பதற்கு வசதி செய்து வைத்துள்ளது.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”  -- திருக்குறள்

என்ற வள்ளுவர் வாக்குகேற்ப கல்வி செல்வம் ஒரு மனிதனுக்கு வழங்க கூடியது அறிவை மட்டுமல்ல நற்பண்புகளையும் சேர்த்து தான். மக்களிடையே புரட்சியை உண்டாக்க கூடிய சக்தி புத்தகங்களிடம் நிறைந்துள்ளது. உலக அளவில் நடந்த மக்கள் புரட்சி, தொழில் புரட்சி, பசுமை புரட்சி போன்ற சரித்திர நிகழ்வுகளே அதற்கு ஆதாரம். எப்போதும் எல்லா இடத்திலும் நல்லவை மட்டுமே நிறைந்திருக்காது, இது அடிப்படை உண்மை. அறிவை கெடுக்கும் அல்லது அடிப்படை தர்மங்களுக்கு புறம்பான புத்தகங்கள், கீழ்தரமான உணர்வுகளை தூண்டக்கூடிய புத்தகங்களை தவிர்த்து நல்ல புத்தகங்களை படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்வது மனதிற்கும் உடலுக்கும் நன்மை செய்யக் கூடியது. முடிந்தவரை சுய நினைவோடு நம் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாப்பது நம் கடமை.

வாசிப்பது எப்படி?
முதல் முறையாக புத்தகங்களை வாசிக்கத் தொடங்கும்போது மனதிற்கு இதமானதைப் படித்து பழகுங்கள். போகப்போக எல்லா விதமான புத்தகங்களையும் படிக்க பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நவரச உணர்வுகளும் அடங்கியதுதான் வாழ்க்கை.  எப்போதும் ஒரே மாதிரியான புத்தகங்களை படித்தால் மற்ற விஷயங்களை நாம் பழகிக்கொள்ள வாய்ப்புக் கிடைக்காது. சற்றே யோசித்துப் பாருங்கள் நம் அன்றாட வாழ்க்கைமுறை ஒரே மாதிரியாக இருந்தால் நமக்கு எவ்வளவு அலுப்பாக இருக்கும் அதுப்போல தான் புத்தகம் படிப்பதும்.
சரி எப்படி படித்து பழகுவது? எப்படி புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிப்பது? இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன... இதோ உங்களுக்கான சிறு குறிப்புகள் பிடியுங்கள்...
முதலில் ஒரு புத்தகத்தை எடுத்ததும் முன்னுரை, அணிந்துரை, என்னுரை போன்ற சில பல உரைகள் இருக்கும். அவற்றை எழுதியது  பெரும்பாலும் நமக்கு நன்றாக கேள்விப்பட்ட பெயர்களாகவே இருக்கும். அதன் மூலம் அந்த புத்தகத்துக்குள் நாம் போகலாமா? எழுதிய ஆசிரியர் எப்படிப்பட்டவர்? நமக்கு பிடித்த மாதிரியான கருத்துகள் உள்ளனவா? இவைகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் கிடைத்துவிடும். மேற்கொண்டு அந்தப் புத்தகத்தை படிக்கலாமா என்று தெளிந்துக் கொண்டு தொடரலாம். இது முதல்படி மட்டுமே. அதாவது புத்தகம் படிப்பதை பழக்கமாக்கி கொள்ள மட்டிலுமே.
எல்லா நேரங்களிலும் நம்மால் நகைச்சுவை துணுக்குகளை மட்டுமே படித்துக் கொண்டிருக்க இயலாது. “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுஎன்பது போல சில நேரங்களில் சமுக தளம், சில நேரம் சரித்திரம், சில நேரம் கருத்து கணிப்புகளில் பங்கேற்பு, நாட்டுப்பற்று சார்ந்தவை, வாழ்வியல் கதைகள் என்று நமது வாசிக்கும் தளங்களை மாற்றிக்கொண்டே இருத்தல் அறிவை வளர்க்கும், நற்சிந்தனைகளைப் பெருக்கும். கதையோ, கட்டுரையோ எதைப் படித்தாலும் அவையோடு சேர்ந்து நாமும் பயணிக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கும், மாணவருக்கும் நடக்கும் உரையாடல் என்றால் அவர்கள் நம் மனக்கண் முன்னே விரிய வேண்டும், இயற்கை வருணனைகளோடு ஒன்ற வேண்டும், ஆசிரியரின் நடைப்போக்கோடு நாமும்  கைகோர்த்து நடந்தால் தான் செய்திகளை முழுமையாக நாம் கிரகித்துக் கொள்ள முடியும். ஒரு கணக்கு சூத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அதை முதலில் நமக்கு புரியும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு அதன் அரிக்சுவடி புரியத் தொடங்கும். ஒரு வகையில் பார்த்தால் எல்லா படைப்புகளுமே வழ்வியலின் அடிப்படை கருத்துகள் தான் கதையாக, கட்டுரையாக, நகைச்சுவை , ஜோதிடம், வாக்குவாதம், மேடை பேச்சு, போன்ற பன்முக தொகுதிகளாக வெளிவருகின்றன.  நமது புராணங்கள், இதிகாசங்கள் அடிப்படையாகக் கொண்டுதான் பல படைப்புகள் வருகின்றன. நாம் ஒரு நல்ல தலைமுறையை கொடுக்கவோ, உருவாக்கவோ விரும்பினால் நல்ல புத்தகங்களை நாமும் படித்துப் பழக வேண்டும், நம் பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்.


பின்னோட்டம்
முற்றும் போடுவதற்கு முன்னால் உங்களிடம் சில வார்த்தைகள். புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகம் உங்களிடம் தரப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் புத்தகங்களைப் படிக்கலாமா வேண்டாமா என்ற மனநிலையில் இருக்கிறீர்கள். இப்போதே கண்ணில் படும் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். படித்தவற்றை பரிசோதித்துப் பாருங்கள். உங்களால் நிச்சயமாக ஒரு புத்தகத்தை படித்துவிட முடியும். பல பேருக்கு நிறைய பக்கங்கள் இருக்க கூடிய புத்தகம் என்றாலே யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிபட்ட புத்தகங்களைப் படிக்க ஒரு சிறிய யோசனை: புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததும், திருப்புமுனை வரக்கூடிய இடமாக பார்த்து மூடி வைத்துவிட்டு வேறு  வேலையைப் பார்க்க போய்விடுங்கள். அப்போது நீங்கள் சங்கல்பம் செய்துக் கொள்ளுங்கள், கண்டிப்பாக இந்த வேலையை முடித்துவிட்டு தான் அடுத்தது படிப்பது என்று. பிறகு பாருங்கள் அடுத்து அந்த புத்தகத்தில் என்ன வரப்போகிறது என்பதை அறிந்துகொள்ள வேலையை விரைவிலேயே முடித்துவிடுவீர்கள். வேலையும் சீக்கிரம் முடியும் படிக்கும் பழக்கமும் உங்களைப் பற்றிக் கொள்ளும். முயன்று பாருங்களேன்! முயற்சி திருவினையாக்கும்.


வாழ்க நூலகம்வாழ்க வையகம்!!

No comments: