பண்டைய ஆபரணங்களை பற்றிய குறிப்பை இந்த தொகுப்பிலே பார்ப்போம்
பழங்காலங்களில் ஆண்களும் பெண்களும் தலை முதல் கால் வரை ஆபரணங்களால் அலங்கரித்து கொண்டனர். பற்பல விதமான அணிகள் மக்களை அலங்கரித்தன. ஆபரணங்களை சுற்றி காப்பியங்களும் காதல் காவியங்களும் நமக்கு கிடைத்தன. அணிகலன்கள் மாந்தரின் எழிலை மெருகூட்டுவதாய் அமைக்கப்பெற்று வரலாற்றிலும் இடம்பெற்றன.
ஆபரணம் என்றால் பொன்னால் மட்டும் ஆனதல்ல பல வித மலர்கள் தளிர்கள், பித்தளை, வெள்ளி, தாமிரம், பஞ்சலோகம், பொன், வைரம், ரத்தின கற்கள் முதலானவைகள் கொண்டு செய்யப்பட்டன.
ஆண்களுக்குரிய ஆபரணங்கள்
தலை: சூடாமணி, மகுடம்
காது: குண்டலம், மோசகம், கீலம், கடுக்கண்.
கழுத்து: முக்தாவளி, ஹர்ஷகம், பவள வடம், தொடி, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்து வடம்,
விரல்: அங்குலிமுத்ரா, மோதிரம்,
கை: வலயம், பாஹுனாலி, கங்கணம், கடகம், வீரவளை, கொலுசு, காப்பு,
மணிக்கட்டு: ருசக, சூலிகா
முழங்கைக்கு மேல்: கேயூரம், அங்கதம்
மார்பு: த்ரிஸரம் - தொங்கும் முத்துமாலை
இடுப்பு: தலகம், தங்க சூத்ரம், அரையணி, அரைநாண்,
கால்: வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை,
பெண்களுக்குரிய ஆபரணங்கள்
தலை: சிசுபாசம், சிக வ்யாலம், பிண்டிபத்ரம், சூடாமணி, முக்தாஜாலம்(முத்துவலை, (பசுக்களின் கண்கள் பரிமாணத்தில் வலைகள் பின்னியிருக்க வேண்டும்), சீர்ஷ ஜாலம் (கூந்தல் வலை), தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.
நெற்றி: திலகம் (மலர் வடிவங்களைக் கொண்டு புரவத்திற்கு மேல் இருக்க வேண்டும்), சூரி சுட்டி
காது: குண்டலம், கர்ணிகா, கர்ணவலயம், சிகிபத்ரம்(தாமரை நாளத்துடன் கட்டியிருக்க வேண்டும்) பத்ரகர்ணிகா, கர்ணமுத்ரா, கர்ணோத்கீலகம்(காதின் மேல் நுனியில் அணிய), பல்வகை தந்த பத்ரங்கள்(மணிகளுடன் கோர்த்து), கர்ணபூரம், தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, குதம்பை, கொப்பு, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல், மாட்டல், வாளி, காறை கம்பி, திருகு, மகரம்., தூக்கம்
கன்னம்: திலகம், பத்ரலேகா
மூக்கு: மூக்குத்தி, நத்து, புல்லாக்கு, மூக்குவலை
மார்பு: த்ரிவேணி,
கழுத்து ஆபரணங்கள் மார்பு வரை அலங்கரிக்கலாம்.
கழுத்து: முக்தாவலி (முத்துச்சரம்), வ்யாலபங்க்தி(ஸ்ர்ப்ப வகைகள்), மஞ்சரி(மணிமாலை), ரத்ன மாலிகா, 2, 3 4 வட சங்கிலிகள், . கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்), பஞ்சசாரி (5 சங்கிலிகள்), சப்தசாரி ( ஏழு சங்கிலிகள்), நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை உருட்டு திரிசரம், பாசமாலை, தாலி, தாலி மணிவடம், தாழ்வடம், தகடு, திரள்மணி வடம், காந்த நாண் புள்ளிகை
கரங்கள்: அங்கதம், வலயம்(வளையல்கள்) இவை மேல் கரங்களுக்கு; கர்ஜுரகம், உச்சிதிகம் கலாபி, கடகம் இவை முன் கரங்களுக்கு. காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு, சிடுக்கு, சூடகம்
புஜம்: கொந்திக்காய், வளையல், வடுக வாளி
விரல்கள்: ஹஸ்த பத்ரம், பூரகம், சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.
இடை: காஞ்சி(முத்துக்கள் கோர்க்கப்பட்டது (ஒற்றை முத்துச்சரம்) தலகம், மேகலா(8 வட முத்துச்சரம்), ரஸனா( 16 வட முத்துச்சரம்), கலாபம்(25 வட முத்துச்சரம்), {தெய்வங்களுக்கும், அரசிகளுக்கும் 32, 64, 108 வடங்கள்), கச்சோலம்
முழங்காலிலிருந்து கணுக்கால் வரை: பாதபத்ரம்
கணுக்கால்: நூபுரம், கடகம் கிண்கிணி(ஒலிக்கும் மணிகள் கோர்க்கப்பட்டது), மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு, பாத சாயலம், திருவடிக்காறை, கால் வடம்
கால்விரல்கள்: அங்குலீயகம்(மெட்டி), கட்டைவிரலுக்கு திலகம், கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி.
ஆபரணங்கள் அணிவது அழகுக்காக மட்டுமல்லாமல் அந்தந்த பகுதியின் உணர்ச்சிகளை கட்டு படுத்தவும், கெட்ட வாயுக்கள் வெளியேரவும், ஐம்புலன்களையும் கட்டுக்குள் வைக்கவும் இன்னும் பற்பல தேக நலனுக்காகவும் அணியப்பட்டன.
சில அணிகலன்களுக்கு வயது வரம்புகள் கூட உண்டு.
உதாரணமாக மூக்குத்தி பூப்பெய்திய பெண்கள் தான் அணிய வேண்டும் என்பது மரபு. காரணம் பருவப் பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொணருவதற்கு ஏற்படுத்தியதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
மெட்டி - பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகள் கால் விரல்களுடனும் தொடர்புடையது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை போன்றவைகளை சமன் செய்ய இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
முக்கியமான ஆபரணங்களை அதற்குரிய பகுதியில் அணிந்து, வாழ்வில் பயனும் தேக நலனும் பெறுவோமாக!
நன்றி - தொகுப்பிற்கு உதவிய நூல்கள்:
அணிகலன்களும் ஒப்பனையும் - “கிராக்கி”
தமிழ் நாட்டு அணிகலன், (சாத்தான் குளம் அ. இராகவன்)