Saturday, March 14, 2015

கோபம்

கைப் பிடித்து கூட்டி செல்லும் தோழமை அல்ல!
காலில் போட்டு மிதிக்க வேண்டிய எதிரி!!

Wednesday, January 28, 2015

துவர்பத்து

துவர் - பூசுதல்

பூவந்தி திரிபலை புணர் கருங்காலி
நாவலோடு நாற்பால் மரமே

அருஞ்சொற்பொருள்:

பூவந்தி - பூந்திக்கொட்டை
திரிபலை - 1. கடுக்காய்
                       2. தான்றிக்காய்
                       3. நெல்லிக்காய்
கருங்காலி
நாவல்
நாற்பால் - 1. ஆல்
                      2. அரசு
                      3. அத்தி
                      4. இத்தி

மேற்கூறிய பொருட்களைப் பொடியாக செய்து தண்ணீரில் கலந்து அக்கால மக்கள் குளித்து வந்தனர்.

தென்னங்குருத்து



பருவப் பெண்ணாய் பளிச்சென்று இருக்கிறாய்
சந்தனமும் பச்சையுமாய் தளதளன்னு இருக்கிறாய்
அலை அலையாய் கீரிடமும் சூடினாய்
குலை குலையாய் பூத்து குலுங்கி
கருத்தை கவரும் குமரிப் பெண்ணே!

Wednesday, January 21, 2015

ஆபரணங்கள்



பண்டைய ஆபரணங்களை பற்றிய குறிப்பை இந்த தொகுப்பிலே பார்ப்போம்

பழங்காலங்களில் ஆண்களும் பெண்களும் தலை முதல் கால் வரை ஆபரணங்களால்  அலங்கரித்து கொண்டனர். பற்பல விதமான அணிகள் மக்களை அலங்கரித்தன. ஆபரணங்களை சுற்றி காப்பியங்களும் காதல் காவியங்களும் நமக்கு கிடைத்தன. அணிகலன்கள் மாந்தரின் எழிலை மெருகூட்டுவதாய் அமைக்கப்பெற்று வரலாற்றிலும் இடம்பெற்றன.

ஆபரணம் என்றால் பொன்னால் மட்டும் ஆனதல்ல பல வித மலர்கள் தளிர்கள், பித்தளை, வெள்ளி, தாமிரம், பஞ்சலோகம், பொன், வைரம், ரத்தின கற்கள் முதலானவைகள் கொண்டு செய்யப்பட்டன.

ஆண்களுக்குரிய ஆபரணங்கள்

தலை: சூடாமணி, மகுடம்

காது: குண்டலம், மோசகம், கீலம், கடுக்கண்.

கழுத்து: முக்தாவளி, ஹர்ஷகம், பவள வடம், தொடி, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்து வடம்,

விரல்: அங்குலிமுத்ரா,  மோதிரம்,

கை: வலயம், பாஹுனாலி, கங்கணம், கடகம், வீரவளை, கொலுசு, காப்பு,
மணிக்கட்டு: ருசக, சூலிகா

முழங்கைக்கு மேல்: கேயூரம், அங்கதம்

மார்பு: த்ரிஸரம் - தொங்கும் முத்துமாலை

இடுப்பு: தலகம், தங்க சூத்ரம், அரையணி, அரைநாண்,

கால்: வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை,

பெண்களுக்குரிய ஆபரணங்கள்

தலை:  சிசுபாசம், சிக வ்யாலம், பிண்டிபத்ரம், சூடாமணி, முக்தாஜாலம்(முத்துவலை, (பசுக்களின் கண்கள் பரிமாணத்தில் வலைகள் பின்னியிருக்க வேண்டும்), சீர்ஷ ஜாலம் (கூந்தல் வலை), தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

நெற்றி: திலகம் (மலர் வடிவங்களைக் கொண்டு புரவத்திற்கு மேல் இருக்க வேண்டும்), சூரி சுட்டி

காது: குண்டலம், கர்ணிகா, கர்ணவலயம், சிகிபத்ரம்(தாமரை நாளத்துடன் கட்டியிருக்க வேண்டும்) பத்ரகர்ணிகா, கர்ணமுத்ரா, கர்ணோத்கீலகம்(காதின் மேல் நுனியில் அணிய), பல்வகை தந்த பத்ரங்கள்(மணிகளுடன் கோர்த்து), கர்ணபூரம், தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, குதம்பை, கொப்பு, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல், மாட்டல், வாளி, காறை கம்பி, திருகு, மகரம்., தூக்கம்

கன்னம்: திலகம், பத்ரலேகா

மூக்கு: மூக்குத்தி, நத்து, புல்லாக்கு, மூக்குவலை

மார்பு: த்ரிவேணி, கழுத்து ஆபரணங்கள் மார்பு வரை அலங்கரிக்கலாம்.

கழுத்து: முக்தாவலி (முத்துச்சரம்), வ்யாலபங்க்தி(ஸ்ர்ப்ப வகைகள்), மஞ்சரி(மணிமாலை), ரத்ன மாலிகா, 2, 3 4 வட சங்கிலிகள், . கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்), பஞ்சசாரி (5 சங்கிலிகள்), சப்தசாரி ( ஏழு சங்கிலிகள்), நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை உருட்டு திரிசரம், பாசமாலை, தாலி, தாலி மணிவடம், தாழ்வடம், தகடு, திரள்மணி வடம், காந்த நாண் புள்ளிகை

கரங்கள்: அங்கதம், வலயம்(வளையல்கள்) இவை மேல் கரங்களுக்கு; கர்ஜுரகம், உச்சிதிகம் கலாபி, கடகம் இவை முன் கரங்களுக்கு. காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு, சிடுக்கு, சூடகம்

புஜம்: கொந்திக்காய், வளையல், வடுக வாளி

விரல்கள்: ஹஸ்த பத்ரம், பூரகம், சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.

இடை: காஞ்சி(முத்துக்கள் கோர்க்கப்பட்டது (ஒற்றை முத்துச்சரம்) தலகம், மேகலா(8 வட முத்துச்சரம்), ரஸனா( 16 வட முத்துச்சரம்), கலாபம்(25 வட முத்துச்சரம்), {தெய்வங்களுக்கும், அரசிகளுக்கும் 32, 64, 108 வடங்கள்), கச்சோலம்

முழங்காலிலிருந்து கணுக்கால் வரை: பாதபத்ரம்

கணுக்கால்: நூபுரம், கடகம் கிண்கிணி(ஒலிக்கும் மணிகள் கோர்க்கப்பட்டது), மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு, பாத சாயலம், திருவடிக்காறை, கால் வடம்

கால்விரல்கள்: அங்குலீயகம்(மெட்டி), கட்டைவிரலுக்கு திலகம், கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி.


ஆபரணங்கள் அணிவது அழகுக்காக மட்டுமல்லாமல் அந்தந்த பகுதியின் உணர்ச்சிகளை கட்டு படுத்தவும், கெட்ட வாயுக்கள் வெளியேரவும், ஐம்புலன்களையும் கட்டுக்குள் வைக்கவும் இன்னும் பற்பல தேக நலனுக்காகவும் அணியப்பட்டன.

சில அணிகலன்களுக்கு வயது வரம்புகள் கூட உண்டு.

உதாரணமாக மூக்குத்தி பூப்பெய்திய பெண்கள் தான் அணிய வேண்டும் என்பது மரபு. காரணம் பருவப் பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொணருவதற்கு ஏற்படுத்தியதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

மெட்டி - பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகள் கால் விரல்களுடனும் தொடர்புடையது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை போன்றவைகளை சமன் செய்ய இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

முக்கியமான ஆபரணங்களை அதற்குரிய பகுதியில் அணிந்து, வாழ்வில் பயனும் தேக நலனும் பெறுவோமாக!

நன்றி - தொகுப்பிற்கு உதவிய நூல்கள்:
அணிகலன்களும் ஒப்பனையும் - “கிராக்கி”
தமிழ் நாட்டு அணிகலன், (சாத்தான் குளம் அ. இராகவன்)

Sunday, January 11, 2015

வாழ்க்கை



வாழ்க்கையா வாழ்ந்தீர்கள் நீங்கள்?
ஒழுக்கத்தை வகைபடுத்தி வாழ்ந்தீர்கள்
நெறியை வார்த்தெடுக்க வாழ்ந்தீர்கள்
புவியை நேர்படுத்த வாழ்ந்தீர்கள்
மேலாண்மை ஓங்கிட வாழ்ந்தீர்கள்
நீதி உயர்ந்திட வாழ்ந்தீர்கள்
எல்லாம் நிறைந்திட வாழ்ந்தீர்கள்
வாழ்ந்து போதீரே!!

வசவுகள் கூட வாழ்த்தாயின
கசப்புகள் எல்லாம் கரைந்தோடின
யாதும் ஊரே யாவரும் கேளீர்
திண்ணை இருப்பது திண்ணன் அமரவே
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அடைக்கலமே
வாழ்ந்து போதீரே!!

தாலாட்டிலே வாழ்த்துப்பாடி
முலைப்பால் தொட்டே தைரியமூட்டி
தவழ்ந்திடும் போதே நடைதிருத்தி
வாய் திறந்து பேச மகிழ்ந்து கொண்டாடி
வாழ்க்கையை திடமுடன் வாழ ஊக்கமளித்து
தோழமையொடு வளர்த்தீரே
வாழ்ந்து போதீரே!!

எம் பிள்ளை இது போல
மலர்ந்திடுமா? வளர்ந்திடுமா?
மறந்திலேன் துறந்திலேன் தங்களை
எம் குலம் தழைக்கவாவது

வாழ்ந்து போதீரே!

பாமரப்பாட்டு



எண்ணங்களுக்கு வண்ணமேற்ற
சிந்தையிலே குழப்பியெடுத்து
வலைப்பூ நாடி முகிலம் தேடி
தோண்டி பண்ணெடுத்து
தொடுத்த நல்கவிதை இது

நல்லறிவுக்கு நாலாயிரம் பழமொழியோடு
நீதிநெறி விளக்கம் தெளிந்து
சமையலின் மேல் மையல் கொண்டு
தமிழக விளையாட்டுகளில் திளைத்து
சித்த மருத்துவ குறிப்பேடுகள் புரட்டி
தேர்ந்தெடுத்த பல குறிப்புகளோடு

தமிழிசை தெம்மாங்கென்றும்
நாட்டுப் புறப்பாடலென்றும்
கிராமியப் பாடலென்றும்
வலை முழுக்க தேடினேன்
விதம் விதமாய் சொற்றொடரமைத்து
தேடி அலைந்தேன் கிராமியப் பாடல் கேட்க

இத்தனை தேடியும் என் சிந்தைக் கவர்ந்த
அத்தனை பாடலும் அமையவில்லை
புத்தகங்கள் தேடி வலை நாடி அமையாத
அப்பாடல் கேட்டேன்...........

கழனி வயலில் கண்ணம்மா பாடுகிறாள்
காற்றோட்ட திண்ணையிலே குப்பன் பாடுகிறான்
பள்ளி சிறார்கள் பாடியபடி ஓடுகிறார்கள்
வலைகள் பல பிண்ணினாலும் வாடாத வசந்தம்
இன்னும் வாழ்கிறது இயல்பாய்
பாமரனின் பாடலிலே!!


Saturday, January 10, 2015

படிப்பு

ஒரு துண்டு காகிதத்தில் இருப்பதை கூட

படிப்பவன் படிப்பாளி!

புரிந்து படிப்பவன் புத்திசாலி!!

ஆராய்ந்து தெளிவு பெறுபவன் வெற்றியாளன்!!!

தன்னம்பிக்கை


இந்த உலகத்திற்கு கடவுள் என்னை நம்பி............

கையோடு "வா" என்று சொன்னார்கள் வந்தேன்
கையோடு "பார்" என்று சொன்னார்கள் பார்த்தேன்
கையோடு "கேள்" என்று சொன்னார்கள் கேட்டேன்
கையோடு "படி" என்று சொன்னார்கள் படித்தேன்
கையோடு "பேசு" என்று சொன்னார்கள் பேசினேன்
கையோடு "எழுது" என்று சொன்னார்கள் எழுதினேன்
கையோடு "முயல்" என்று சொன்னார்கள் முயன்றேன்
கையோடு "வாழ்" என்று சொன்னார்கள் வாழ்கிறேன்

இந்த "கை"க்கு எல்லாம் கை கொடுத்தது
நம்பிக்கை
அதை தூண்டியது .....................
தன்னம்பிக்கை


தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி!!

செயல்





எனக்கு எல்லாம் தெரியும் என்பது 

அசட்டு நம்பிக்கை

என்னால் இதை செய்ய முடியும் என்பது

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை என்பது செயல் வடிவம்!!

Sunday, January 4, 2015

பொங்கல் வாழ்த்து



தத்தி தவழ்ந்து வரும்
தைமகளாம் தமிழ் மகள்!
இத்தினத்தில் வரவேற்க
தைப் பொங்கல் வைப்போம்!!

அதிகாலை துயிலெழுந்து
ஆதவன் விழிக்கும் முன்னே
தலை முதல் நீராடி
புத்தாடை உடுத்தி
புது நெல் குத்தி
புதுப்பானையில் இட்டு
மஞ்சள் கட்டி
மங்களக் கோலமிட்டு
தலைவாழை இலை போட்டு
முக்கனி படைத்து
தித்திக்கும் அன்னமிட்டு
செவ்வண்ண ரவிவர்மா
வானக் கோலங்கள் போட
தீபச்சுடர் காட்டி
செந்தமிழ் சொட்ட
பொங்கலோ பொங்கலென்பேன்

பொங்கற் பூத்தூவி
புத்தாடை தொட்டிலுக்குள்
தங்கத் தேரொட்டும்
தூயமலர் மேனியர்பால்
தங்கி தாலாட்டி
தலைதூக்கும் பொங்கல்
இருள் நீங்கி ஒளி பிறந்திட
இன்பம் எங்கும்
பொங்கி பெருகிட
தொழில்வளம் சிறந்து
செல்வம் நிறைந்திட
பொங்கலோ பொங்கலென்பேன்

தை மாதம் முதல் தேதி
வந்து நீ ஒரு சேதி
சொல்லுவாய் நன்மகளே
"தை பிறந்தால் வழி பிறக்கும்"
வடக்கிலே சங்கராந்தி
தெற்கிலே பொங்கலென்று
பொங்கு நீ திருமகளே