Sunday, February 25, 2024

பிராயச்சித்தம் (நினைவுப்‌ பின்னல் - பகுதி 2)

மிதிலாவின் அழகு கொள்ளை கொள்வதாய் அதைவிட அவளின் அறிவும் புத்திசாலித்தனமும் பளிச்சிடுவதாய் இருந்தது.

 காலையில் தனது பங்களாவின் முன் அமைக்கப்பட்டிருந்தால் புல் தரையில் நடந்து கொண்டே வாசிப்பது அவளுக்கு பிடித்தமான செயல். கல்லூரிக்கு செல்லும்போது தாயாரின் உணவும் அவள் கொடுக்கும் நம்பிக்கைச் சொற்களுமாய் கிளம்பும் மிதிலாவுக்கு தந்தையை கண்டால் பயம்.



எப்போதும் பணம்,மரியாதை, கௌரவம் என்று அடுத்தவருக்கு மதிப்பு தராத அவரை அவளுக்கு பார்க்க பார்க்க வருத்தம் தான். பெயருக்கு ஏற்றபடி கமலநாதனாக இருக்கக் கூடாதா?

 அதனால் தான் நற்பண்புகள் மிகுந்திருந்த ராஜாராமனை பிடித்ததோ?வீட்டை எதிர்த்து  திருமணம் செய்யும் துணிவும் வந்ததோ? தாயார் மீது இருந்த பற்றினால் அவளிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்து அவரிடம் ஆசி பெற்ற பின்னே திருமணம் செய்துக் கொண்டாள். கமலநாதனுக்கு இது மிகவும் அவமானமாக போனது. "நாங்கள் செத்தாலும் இனி கண் முன்னே வராதே" என்று சொல்லிவிட்டார்.  சொல்லியபடியே தன் மனைவி இறந்த போதும் மிதிலாவை பார்க்க விடவில்லை.

 காலங்கள் உருண்டோடின. தன் மாப்பிள்ளை ராஜாராமன் விபத்தில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போதும், மகள் மிதிலா பணத்திற்கு கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தும் கல்லாய் இருந்தவர் இப்போது பேத்தி பவானியை மட்டும் சொந்தம் கொண்டாடினால் அவர் ஒத்துக் கொள்வாளா? மிதிலா தன் மகள் பவானிக்கு எந்த அளவு சொல்லி இருக்கிறார் என்று அவருக்கும் ஒன்றும் தெரியாது.

 விதியின் விளையாட்டு என்ன சொல்ல?

தொடரும்...

No comments: