சனிக்கிழமை காலை வெள்ளனவே கிளம்பி கமலநாதன் தன் பேத்தி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார். விசாரித்து அறிந்து கொண்டவரை வார இறுதிகளில் பவானி எங்கும் செல்வதில்லை. ஞாயிறுகளில் சில மணி நேரம் சாரதா தொண்டு நிறுவனத்திற்கு சென்று வருவாள் என்றும் தெரியும். அதனால் காலை 9 மணி அளவில் அவள் வீட்டு முன்பு வந்தார். இப்போது அவர் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் பையனை அழைத்து வரவில்லை.
அழைப்பு மணிக்கு கதவை திறந்த பவானிக்கு சற்று நேரம் யாரென்று புரியவில்லை. ஆனால் தனது தாய் சொல்லியிருந்த அடையாளம் மற்றும் உண்மை சம்பவங்களை வைத்து தனது தாயாரின் தந்தை தான் வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்டாள். அதனாலயே உள்ளே வாருங்கள் என்று பொதுப்படையாக கூறிவிட்டு உள்ளே அழைத்துச் சென்று வசதியான சோபாவில் அமர வைத்தாள். குளிர்ந்த நீரை குடிக்க தந்து "சாப்பிடலாமா" என்று உபசாரமும் செய்தாள். "வந்தாரை உபசரிப்பதே தமிழர் பண்பாடு இல்லையாம்மா. உங்க அம்மா உன்னை நல்லா வளர்த்திருக்கிறாள்" என்றார்.
பேத்தி தந்த பொங்கல் சட்னி வடையோடு திருப்தியாக சாப்பிட்டவர் விஷயத்துக்கு வந்தார். உங்க அம்மாவுக்கு நான் செய்தது மிகப்பெரிய தவறு கொடுமைதான். ஆனால் அதற்கு பிராயச்சித்தம் செய்வதே சரி என்று உன்னை தேடி வந்திருக்கிறேன் அம்மா என்றார்.
என்ன சொல்லுங்கள் என்றாள். எனது சொத்துக்கள் அனைத்தையும் உன் பெயரில் எழுதி வைத்துவிட்டு உன்னை என்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று நினைக்கிறேன் என்றார். பவானி ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்தபின் மெதுவாக சொல்ல தொடங்கினாள் "என்னுடைய அம்மாவுக்கு எது வேண்டாமோ அது எனக்கும் வேண்டாம் தாத்தா. நீங்கள் சிறுவயது முதல் அவரிடம் பாசம் காட்டி இருந்தால் அவர் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரால் சுய முயற்சி செய்திருக்க முடியாது. மேலும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்க்கையும் வாழ்ந்திருக்க முடியாது. இப்போதும் வந்ததிலிருந்து உன் அம்மா என்று சொல்கிறீர்கள் என் மகள் என்று உங்கள் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை, அது உங்கள் சுபாவமாக இருக்கலாம் தாத்தா. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள நான் தயார். ஆனால் உங்கள் சொத்தின் மீது எனக்கு விருப்பமில்லை. சொந்தம் என்று நாடி வந்த உங்களை வருத்தவும் தயார் இல்லை. நீங்கள் என்னுடனே இருந்து விடுங்கள். சொத்துக்களை உங்கள் விருப்பப்படி தர்மத்திற்கு எழுதி தந்து விடுங்கள். இதற்கு சம்மதம் என்றால் நான் உங்களிடம் பற்று வைத்து உங்களுடன் இருக்கிறேன் என்றாள்.
தன்மகள் விதைத்த விதையின் விருட்சத்தை முகமும் அகமும் மலர உணர்ந்தவர் தன் செல்ல பேத்தியின் விருப்பத்திற்கு மனதார தலையாட்டினார்.
ஆம்! அதுதான் உண்மையான பிராயச்சத்தம்
🍁 சுபம்! 🍁