Wednesday, February 28, 2024

பிராயச்சித்தம் (அருமையான ஆரம்பம் - இறுதி பகுதி)

 சனிக்கிழமை காலை வெள்ளனவே கிளம்பி கமலநாதன் தன் பேத்தி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார். விசாரித்து அறிந்து கொண்டவரை வார இறுதிகளில் பவானி எங்கும் செல்வதில்லை. ஞாயிறுகளில் சில மணி நேரம் சாரதா தொண்டு நிறுவனத்திற்கு சென்று வருவாள் என்றும் தெரியும். அதனால் காலை 9 மணி அளவில் அவள் வீட்டு முன்பு வந்தார். இப்போது அவர் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் பையனை அழைத்து வரவில்லை.

 அழைப்பு மணிக்கு கதவை திறந்த பவானிக்கு சற்று நேரம் யாரென்று புரியவில்லை. ஆனால் தனது தாய் சொல்லியிருந்த அடையாளம் மற்றும் உண்மை சம்பவங்களை வைத்து தனது தாயாரின் தந்தை தான் வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்டாள். அதனாலயே உள்ளே வாருங்கள் என்று பொதுப்படையாக கூறிவிட்டு உள்ளே அழைத்துச் சென்று வசதியான சோபாவில் அமர வைத்தாள். குளிர்ந்த நீரை குடிக்க தந்து "சாப்பிடலாமா" என்று உபசாரமும் செய்தாள். "வந்தாரை உபசரிப்பதே தமிழர் பண்பாடு இல்லையாம்மா. உங்க அம்மா உன்னை நல்லா வளர்த்திருக்கிறாள்" என்றார்.

 பேத்தி தந்த பொங்கல் சட்னி வடையோடு திருப்தியாக சாப்பிட்டவர் விஷயத்துக்கு வந்தார். உங்க அம்மாவுக்கு நான் செய்தது மிகப்பெரிய தவறு கொடுமைதான். ஆனால் அதற்கு பிராயச்சித்தம் செய்வதே சரி என்று உன்னை தேடி வந்திருக்கிறேன் அம்மா என்றார்.


என்ன சொல்லுங்கள் என்றாள். எனது சொத்துக்கள் அனைத்தையும் உன் பெயரில் எழுதி வைத்துவிட்டு உன்னை என்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று நினைக்கிறேன் என்றார். பவானி ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்தபின் மெதுவாக சொல்ல தொடங்கினாள் "என்னுடைய அம்மாவுக்கு எது வேண்டாமோ அது எனக்கும் வேண்டாம் தாத்தா. நீங்கள் சிறுவயது முதல் அவரிடம் பாசம் காட்டி இருந்தால் அவர் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரால் சுய முயற்சி செய்திருக்க முடியாது. மேலும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்க்கையும் வாழ்ந்திருக்க முடியாது. இப்போதும் வந்ததிலிருந்து உன் அம்மா என்று சொல்கிறீர்கள் என் மகள் என்று உங்கள் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை, அது உங்கள் சுபாவமாக இருக்கலாம் தாத்தா. அதை அப்படியே  ஏற்றுக் கொள்ள நான் தயார். ஆனால் உங்கள் சொத்தின் மீது எனக்கு விருப்பமில்லை. சொந்தம் என்று நாடி வந்த உங்களை வருத்தவும் தயார் இல்லை. நீங்கள் என்னுடனே இருந்து விடுங்கள். சொத்துக்களை உங்கள் விருப்பப்படி தர்மத்திற்கு எழுதி தந்து விடுங்கள். இதற்கு சம்மதம் என்றால் நான் உங்களிடம் பற்று வைத்து உங்களுடன் இருக்கிறேன் என்றாள்.

 தன்மகள் விதைத்த விதையின் விருட்சத்தை முகமும் அகமும் மலர உணர்ந்தவர் தன் செல்ல பேத்தியின் விருப்பத்திற்கு மனதார தலையாட்டினார். 

ஆம்! அதுதான் உண்மையான பிராயச்சத்தம் 

🍁 சுபம்! 🍁

Sunday, February 25, 2024

பிராயச்சித்தம் (நினைவுப்‌ பின்னல் - பகுதி 2)

மிதிலாவின் அழகு கொள்ளை கொள்வதாய் அதைவிட அவளின் அறிவும் புத்திசாலித்தனமும் பளிச்சிடுவதாய் இருந்தது.

 காலையில் தனது பங்களாவின் முன் அமைக்கப்பட்டிருந்தால் புல் தரையில் நடந்து கொண்டே வாசிப்பது அவளுக்கு பிடித்தமான செயல். கல்லூரிக்கு செல்லும்போது தாயாரின் உணவும் அவள் கொடுக்கும் நம்பிக்கைச் சொற்களுமாய் கிளம்பும் மிதிலாவுக்கு தந்தையை கண்டால் பயம்.



எப்போதும் பணம்,மரியாதை, கௌரவம் என்று அடுத்தவருக்கு மதிப்பு தராத அவரை அவளுக்கு பார்க்க பார்க்க வருத்தம் தான். பெயருக்கு ஏற்றபடி கமலநாதனாக இருக்கக் கூடாதா?

 அதனால் தான் நற்பண்புகள் மிகுந்திருந்த ராஜாராமனை பிடித்ததோ?வீட்டை எதிர்த்து  திருமணம் செய்யும் துணிவும் வந்ததோ? தாயார் மீது இருந்த பற்றினால் அவளிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்து அவரிடம் ஆசி பெற்ற பின்னே திருமணம் செய்துக் கொண்டாள். கமலநாதனுக்கு இது மிகவும் அவமானமாக போனது. "நாங்கள் செத்தாலும் இனி கண் முன்னே வராதே" என்று சொல்லிவிட்டார்.  சொல்லியபடியே தன் மனைவி இறந்த போதும் மிதிலாவை பார்க்க விடவில்லை.

 காலங்கள் உருண்டோடின. தன் மாப்பிள்ளை ராஜாராமன் விபத்தில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போதும், மகள் மிதிலா பணத்திற்கு கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தும் கல்லாய் இருந்தவர் இப்போது பேத்தி பவானியை மட்டும் சொந்தம் கொண்டாடினால் அவர் ஒத்துக் கொள்வாளா? மிதிலா தன் மகள் பவானிக்கு எந்த அளவு சொல்லி இருக்கிறார் என்று அவருக்கும் ஒன்றும் தெரியாது.

 விதியின் விளையாட்டு என்ன சொல்ல?

தொடரும்...

Tuesday, January 23, 2018

பழமொழி மருத்துவம்

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்



 இப்பழமொழி தமிழர்களின் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும்.

கடுக்காய் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை காய் ஆகும்.

இதன் மேல் தோலை மட்டும் (கடுக்காய்க்கு அக நஞ்சு - கொட்டை விஷம்) மருத்துவத்திற்கு எடுத்து பொடித்து சூரணமாக ஆக்கி நெய்/தேனுடன் சேர்த்தோ அல்லது வேறு வகையிலோ பயன்படுத்துவார்கள்.

கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிலக்கியாக பயன்படும்.

அதை போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

ஒருவருக்கு மலம் போகாமல் மலச்சிக்கல் நோய் வரும் போது மலமிலக்கியாக எட்டு கடுக்காயை சூரணம் செய்து கொடுத்தால் மலவரத்து சீராகும். இதுவே பிள்ளை பெற்ற தாய்க்கும் மருந்தாக பயன்படும். எரு = கழிவு = மலம்

Wednesday, January 17, 2018

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!!

 கரும்பு இஞ்சி மஞ்சள் முளைத்த இரு சக்கர வாகனங்கள்!
கட்டியம் கூறுகிறது பொங்கல் வந்ததென்று!!
அழகு வரிசைக் கட்டிக் கொண்ட பானைகளும் களையங்களும்!
அறிவிப்பாய் கூறுகிறது பொங்கல் வந்ததென்று!!

பனை ஓலையா மாவிலையா பூங்கொத்துகளா!
பலவித தோரணங்கள் பறை சாற்றுகின்றன பொங்கல் வந்ததென்று!!
காய்கறிகளும் கனிக் கூட்டங்களும் கமுகும் வாழையும் கூட்டாய் நின்றன பொங்கல் வந்ததென்று!!
உழவுக் காளைகளும் காராம் பசுக்களும்!
ஆவலோடு பார்த்தன பொங்கல் வந்ததென்று!!

தீபமேற்றி சூரிய வழிபாடு!
உழவர்களின் முறைபாடு!
இத்தனை இன்பங்கள் அள்ளிக் கொடுத்திடும்!
பொங்கல் வந்ததென்று தான... தந்தானா... நீ பாடு!!

 பண முடக்கம் மழை பொய்த்து வழக்குகள் வந்தாலும்!
இன்னும் பற்பல இடர்கள் வந்தாலும்...
 புதுப்படங்கள் புத்தாடை புன்னகை பூசிவிட!!
பொங்கலும் வந்ததே எங்கள் துயர் மறக்க என்று!
தமிழர்கள் பாடினார்கள்..... (பொங்கலோ பொங்கல்!)

 - இராஜகுமாரி விஸ்வேஸ்வரன்